தொலைதூர கல்வி படிப்பில் சேர அக்.31 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




19/10/2024

தொலைதூர கல்வி படிப்பில் சேர அக்.31 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

 

1327496

தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி தேதி அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.


இந்நிலையில், ஜூலை 2024 பருவத்துக்கான மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியானது, பல்வேறு தரப்பினரின் நலனை கருத்தில்கொண்டு அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தேதி நீட்டிப்பு, சான்றிதழ் மற்றும் செமஸ்டர் அடிப்படையிலான படிப்புகளுக்கு பொருந்தாது.எனவே, செமஸ்டர் அடிப்படையிலான மற்றும் சான்றிதழ் படிப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து வகை இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமா படிப்புகளில் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி அக்டோபர் 31-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இக்னோ பல்கலைக்கழகத்தில் பிஏ, பிகாம், பிஎஸ்சி (பொது) படிப்புகளில் சேரும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும், இக்னோ சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும் விவரங்கள் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459