பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்ப இடைக்கால தடை - ஆசிரியர் மலர்

Latest

 




27/09/2024

பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்ப இடைக்கால தடை

 


Chennai_High_Court

தகுதி பெற்ற அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனங்களை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.


பள்ளி கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 50 சதவீத இடங்களை நேரடியாகவும், 48 சதவீத இடங்களை இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும், எஞ்சிய 2 சதவீத இடங்களை தகுதி பெற்ற அமைச்சு பணியாளர்கள் வாயிலாகவும் நிரப்ப வேண்டும் என 2007ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


இந்த அரசாணைப்படி 2011ம் ஆண்டு வரை தகுதி பெற்ற அமைச்சு பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. பின் அமைச்சு பணியாளர்களுக்கு அந்த ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி பரணி என்பவர் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் நளினி சிதம்பரம், ஜி.சங்கரன், 'சட்ட ரீதியாக மனுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணியிடங்களை வழங்கவில்லை. எனவே அந்த பணியிடங்களை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று வாதிட்டனர்.


நீதிபதி 'அரசாணைப்படி அந்த 2 சதவீத இடங்களை அமைச்சு பணியாளர்களுக்கு ஒதுக்கி அவர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களை மேற்கொள்ளக் கூடாது' என இடைக்கால தடை விதித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459