தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகள் ஒத்திவைப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




29/08/2024

தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகள் ஒத்திவைப்பு

 

 

1302689

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் எஸ்எம்சி குழு மறுகட்டமைப்பு நடைமுறைகள் செப்.4-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2022-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. அவற்றின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து 2024-26-ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்து எஸ்எம்சி குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 37,061 அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி குழுக்களுக்கு புதிய உறுப்பினர் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 10, 17-ம் தேதிகளிலும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆகஸ்ட் 24-ம் தேதியும் எஸ்எம்சி குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டன. தொடர்ந்து இறுதிக்கட்டமாக அரசு நடுநிலைப் பள்ளிகளில் மேலாண்மைக் குழுக்கள் நாளை மறுதினம் (ஆக. 31) மறுகட்டமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் எஸ்எம்சி குழு மறுகட்டமைப்பு நடைமுறைகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


இதற்கிடையே தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மண்டல மாநாடு ‘பெற்றோரைக் கொண்டாடுவோம்’ எனும் தலைப்பில் பாளையங்கோட்டையில் நாளை மறுதினம் (ஆக.31) நடத்தப்பட உள்ளது. இதில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு அன்றைய தினம் நடத்தப்பட உள்ள பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு பணிகள் தற்போது செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.


அதேநேரம் மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி எஸ்எம்சி குழு மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனுடன் எஸ்எம்சி குழுவுக்கு புதிதாக தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் ஆதார் எண் உட்பட விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும். இதுசார்ந்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டுமென சுற்றறிக்கை வாயிலாக பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459